ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 2022-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், திங்களன்று (27ம் தேதி) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
54 வயதான பேரறிவாளன், இனி கருப்பு அங்கி அணிந்து, 31 ஆண்டுகளாகத் தான் ஒரு குற்றவாளியாக நின்ற அதே நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது. ராஜீவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 1991 ஜூன் மாதம் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். சதி வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரில் அவரும் ஒருவர். ஆனால், தன் மகனுக்கு இந்த அமைப்பு அநீதி இழைத்துவிட்டது என்று நம்பிய அவரது தாயார் அற்புதம் அம்மாள், தன் மகனைச் சிறையிலிருந்து விடுதலை செய்யக் கோரி, கிடைத்த எல்லா வழிகளிலும் போராடினார். கண்ணீருடன் இடைவிடாத ஒரு பிரச்சாரமாக அரசியல் தலைவர்கள், முதலமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் மனு அளித்து வந்தார். கருணாநிதி முதல் ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி, மு.க. ஸ்டாலின் உட்பட 1991 முதல் தமிழகத்தை நிர்வகித்த ஒவ்வொரு முதலமைச்சரையும் சந்தித்து தன் தரப்பை நிலையைக் கூறி வந்தார்.
2022 ஆம் ஆண்டு மே மாதம், உச்ச நீதிமன்றம் அவரது நீண்டகால சிறைவாசத்தைக் காரணம் காட்டி, அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. முன்னதாக, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்ததுடன், பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் திரும்பப் பெறப்பட்டிருந்தன. 2025-ல் தனது பட்டப்படிப்பை முடித்து, அதே ஆண்டில் அகில இந்திய வழக்கறிஞர் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். "குற்றவாளிகளுக்கு எதிராகப் பாகுபாடு காட்டாத, மேலும் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளதைப் போல தண்டனைக்குப் பிந்தைய குற்றமற்றவர் என விடுவிக்கும் சட்டங்களை ஏற்கும் ஒரு குற்றவியல் நீதி அமைப்பை உருவாக்குவதே எனது கனவு," என்று இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் அவர் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.