தமிழ்நாடு

கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் அவதி...நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் உறுதி!

Malaimurasu Seithigal TV

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரம் மணல் திட்டுக்களாக அடைபட்டுள்ள நிலையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்  2 தற்காலிக முகத்துவாரம் அமைத்து வருவதாக தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பழவேற்காடு முகத்துவாரம் மணல் திட்டுக்களால் அடைபட்டு முற்றிலும் தூர்ந்து போயுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். முகத்துவாரத்தை சொந்த செலவில் தற்காலிகமாக மீனவர்களே தூர்வார முடிவு செய்திருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பழவேற்காடு ஏரியில் படகில் சென்று தூர்ந்து போன முகத்துவாரம் பகுதியில் ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்காலிக தீர்வாக நீர்வளஆதாரத்துறை மூலமாக 2 முகத்துவாரம் ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மிதவை ட்ரட்ஜர் இயந்திரம் கொண்டு ஒரு முகத்துவாரம் ஓரிரு நாட்களில் ஏற்படுத்தி தரப்படும் எனவும், மற்றொரு இடத்தில் மீனவர்களின் கோரிக்கையின் இயந்திரங்களின் உதவியுடன் 10 நாட்கள் முதல் ஒரு மாதத்திற்குள் தூர்வாரி நீரோட்டத்திற்கான பாதை அமைத்து தரப்படும் எனவும், ஆட்சியர் கூறினார்.