தமிழ்நாடு

தமிழக அரசு அதிரடி உத்தரவு: உரிய நிறுத்தத்தில் ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்த வேண்டும்!

Tamil Selvi Selvakumar

உரிய பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகர போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள் பேருந்துகளை சாலையின் நடுவிலோ அல்லது நிறுத்தத்தை விட்டு சற்று தள்ளியோ நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் சிரமத்துடன் ஓடிச்சென்று பேருந்துக்குள் ஏறும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சில சமயங்களில் காயம் ஏற்பட்டு மரண விபத்து நிகழவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சாலையின் இடதுபுற ஓரமாக உரிய நிறுத்தத்தில் மட்டுமே பேருந்தை நிறுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.