சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரவு-செலவு கணக்குகளை தமிழக அரசு ஆய்வு செய்ய திட்டமிட்டு, அதுதொடர்பாக தீட்சிதர்களுக்கு நோட்டீசும் அனுப்பியது.
மேலும் ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம் உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் தீட்சிதர்கள் ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவர்களுடன் நேற்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றுள்ள அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 5 பேர் குழுவினர், கோயில் கணக்குகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வு நாளையும் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.