Vijay in nagapattinam  
தமிழ்நாடு

நான் தனியாள் இல்ல.. என் பின்னாடி ஒரு பெரிய படையே இருக்கு.. என்கிட்ட வச்சுக்காதீங்க! - நாகையில் விஜய் பேச்சால் எழுந்த அதிர்வலை..!!

முதலமைச்சரை நேரடியாகக் குறிப்பிட்டு, "மிரட்டிப் பார்க்கிறீங்களா?" என்று கேள்வி எழுப்பியது அரசியல் அரங்கில்....

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.

அரசியல் களத்தில் தனது இரண்டாவது பயணத்தை நாகப்பட்டினத்தில் தொடங்கிய நடிகர் விஜய், அங்கே திரண்டிருந்த மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னால், ஆளும் அரசுக்கு எதிராகக் கடும் சீற்றத்துடன் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது அரசியல் பயணத்திற்கு அரசு தரப்பில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து வெளிப்படையாகப் பேசிய விஜய், முதலமைச்சரை நேரடியாகக் குறிப்பிட்டு, "மிரட்டிப் பார்க்கிறீங்களா?" என்று கேள்வி எழுப்பியது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து திமுக அரசினை “குடும்ப அரசியல், ஊழல் கட்சி என்று கடுமையாக விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மீனவ மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என வலியுறுத்தி பேசினார். மீனவர்களுக்கு மட்டுமின்றி ஈழத்தமிழர்களுக்காகவும் “தாய் பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கிற” ஈழத்தமிழர்களின் வாழ்வை பாதுகாப்பதும் நமது கடமை என பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சொந்த குடும்பத்தின் வளர்ச்சியே ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. எனது சொந்த மக்களை சந்திப்பதற்கு எதனை கட்டுப்பாடுகள். அங்க பேச கூடாது, இங்க பேசக்கூடாது, நா பேசுறது 3 நிமிஷம்தான், நான் என்னதத்தான்யா பேசறது. இதாவது பரவாஇல்லைங்க ..இதத்  தாண்டி ஒரு ரூல் போட்டாங்க..பஸ் -க்குள்ளையே இருக்கணுமா… கைய ரொம்ப தூக்கக்கூடாதாம்..என்ன நான் கேட்டுட்டேன், என் மக்களை, என் குடும்பத்தை சந்திக்க போறேன்.. என்னதான் சார் உங்க எண்ணம். சரிங்க சார் அரசியல் தலைவர் அப்டிங்கிறதெல்லாம் மறந்துடுங்க, சாதாரண தமிழ்நாட்டு மண்ணோட மகனா, பலகோடி பெண்களின் சகோதரனா, என் மக்களோட சொந்தக்காரனா நான் பாக்க போனா அப்போ என்ன பண்ணுவீங்க..? அப்போதும் தடை செய்வீர்களா?? வேணாம் சார்.. நாம ஒன்னும் இங்க தனி ஆளு இல்லைங்க சார். மாபெரும் மக்கள் சக்தியோட பிரதிநிதி சார், மாபெரும் பெண்கள் சக்தியோட சகோதரன் சார்.. மாபெரும் இளைஞர் இயக்கமா இருக்கோம் சார்… நான் நேரடியாகவே கேக்குறேங்க..’மிரட்டி பாக்குறீங்களா? சி.எம் சார். உங்க மெரட்டலுக்குலாம் பயப்படுற ஆள் நாம இல்ல சார்.. கொள்கையை சும்மா பேருல மட்டும் வெச்சிக்கிட்டு  குடும்பத்தை வச்சு கொள்ளையடிக்கிற உங்களுக்கே இவ்ளோ இருக்குன்னா, சொந்தமா சம்பாரிச்சு வாழுற எனக்கு எவ்ளோ இருக்கும்? என காரசாரமாக பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.