karur stampade  
தமிழ்நாடு

“ரோட் ஷோக்களில் மக்கள் பாதுகாப்புக்கு ஏற்பாட்டாளர்கள்தான் பொறுப்பு” - நெறிமுறைகளை தாக்கல் செய்தது தமிழக அரசு!

5 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என்று எதிர்பார்க்க கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள்...

மாலை முரசு செய்தி குழு

அரசியல் கட்சிகளின் நடத்தும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பிற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு என தமிழக அரசு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

கரூரில், செப்டம்பர் 27 ம் தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், வரைவு வழிகாட்டு விதிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, கெடு விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள் முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது தமிழக அரசின் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோக்களுக்கு கடைபிடிக்க வேண்டியது தொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்தார். இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கட்சியினரிடம் கருத்துகளை பெற்ற பின் இறுதி செய்யப்படும் என்றும் நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பானது என்பதால் பொதுமக்களின் கருத்துகளை வரைவு வழிகாட்டு நெறிமுறை மீது கேட்க தேவையில்லை என தெரிவித்தார்.

இந்த வரைவு வழிக்காட்டு நெறிமுறைகளை தற்போதைய நிலையில் தவெக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தவெக உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தங்களுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என நீதிபதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, தமிழக அரசு வகுத்துள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வழக்கு தொடர்ந்திருந்த அதிமுக, தவெக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி உள்ளிட்டோருக்கு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.

அதன் மீதான கருத்துகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 27 -ம் தேதிக்கு தள்ளி வைத்தது. இதனிடையே தமிழக அரசு வகுத்துள்ள 42 பக்க வரைவு வழிக்காட்டு நெறிமுறைகளில் அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுக்காப்பிற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு என சுட்டிக்காட்டி உள்ளது

5 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என்று எதிர்பார்க்க கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோட் சோக்கள், ஆர்ப்பாட்டம் போராட்டம் மற்றும் கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளுக்கு இந்த விதிகள் பொருந்தும்

வழிப்பாட்டு தளங்களில் நடைப்பெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இந்த வழிக்காட்டு நெறிமுறைகள் பொருந்தாது. நடத்தை விதிகள் அமலில் இருக்கும் தேர்தல் நேரங்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் விதிகள் மட்டுமே அமலில் இருக்கும் இருப்பினும், கூட்டக் கட்டுப்பாடு, குடிநீர்,கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்க செய்யும் இந்த விதிகளை அமல்படுத்துவது ஏற்பாட்டாளர்களின் பொருப்பு

5 ஆயிரத்திற்கும் குறைவாக மக்கள் திரளும் கூட்டங்களுக்கு இது பொருந்தாது. ஆனால் தற்போதைய நடைமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டும் என்ற விதிகள் தொடரும்

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோட் சோக்கள், ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆகிவை நடைப்பெற உள்ள இடங்களை  காவல் துறை அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கலந்தாலோசித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்து அறிவிப்பார்.

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோட் சோக்கள், ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தப்படும் முன் என்ன தேதி, நேரம், எதற்காக நடத்தப்படுகிறது, எவ்வளவு மக்கள் பங்கேற்பார்கள், எத்தனை வாகனங்கள் வரும், பங்கேற்கும் முக்கிய தலைவர்களின் விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்

ரோட் ஷோக்களை பொருத்தவரை பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தை துவங்கும் இடம் மற்றும் முடிக்கும் இடங்களையும், பொதுக்கூட்டங்கள் நடைப்பெறும் இடங்களையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும். தலைமை விருந்தினர்கள் வருகை தரும் நேரம் மற்றும் புறப்படும் நேரத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

இது மாதிரியான நிகழ்வுகளில் மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்க முடியும் என்பதை பொதுப்பணித்துறை பொறியாளர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொதுப்பணித்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டம் மற்றும் ரோட் ஷோக்கள் நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியை பெற வேண்டும்

நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். 50 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என எதிர்ப்பார்க்க கூடிய கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்

திடீரென ஏற்பாடு செய்யப்பட கூடிய ஆர்ப்பாட்டம் போராட்டங்களை பொருத்தவரை மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரும், சென்னைக்கு மாநகர காவல் ஆணையரும் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்

நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற் வேண்டும்..கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு என்றும் நிகழ்ச்சியின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்.  நிகழ்ச்சி முடிந்த பின் அந்த இடத்தை முழுமையாக தூய்மை செய்து வழங்க வேண்டும். கர்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் நீண்ட நேரத்திற்கு நிற்க வைக்காமல், அவர்களுக்கு பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தான் செய்ய வேண்டும். நிகழ்ச்சி துவங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்  உள்ளிட்ட பல  விதிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.