தமிழ்நாடு

தானியங்கி கேமரா மூலம் அபராதம் விதிக்கும் முறை அறிமுகம்...

சென்னை சாலைகளில் அதிவேகமாக சென்றால் தானியங்கி கேமரா மூலம் அபராதம் விதிக்க புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளதாக போக்குவரத்து ஆணையர் பேசினார்.

Malaimurasu Seithigal TV

சென்னை | ஸ்பென்சர் சிக்னல் சந்திப்பில் சென்னை பெருநகர போக்குவரத்து  காவல்  துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட வேகக்காட்சி பலகைகள் (Speed Display Boards),  தானியங்கி சிக்னல்  (Signal Remotes),  எல்.இ.டி போக்குவரத்து சுழற்சி செய்தி நிழற்குடை (LED Scroll Boards) மற்றும் பல்நோக்கு செய்தி பலகைகள் (VMS Boards) ஆகியவற்றின் இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். 

4 கோடியே 25 லட்சம் மதிப்பிலான இந்த திட்டத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். 

வேக காட்சி பலகைகள் (Speed Display Board)...

சென்னை சாலைகளில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதாலே பெரும்பாலும் விபத்துகள் நிகழ்வதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 23,374 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

இதனால், இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் அதிவேகமாக செல்லும் நபர்களை கண்டறிவதில் சிக்கல் இருந்து வந்ததுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக அதிவேகமாக செல்லும் வாகனங்களை பதிவு செய்வதற்கு வேக காட்சி பலகைகள் தற்போது சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஈ.சி.ஆர் சாலை, அசோக் நகர் 100 அடி சாலை, ஓ.எம்.ஆர் சாலை என ஆறு இடங்களில் இந்த வேக காட்சி பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. 

ரூபாய் 25,31,100 செலவில் மேற்கண்ட ஆறு இடங்களில் வேக காட்சிப் பலகைகள் (ஸ்பீடு டிஸ்ப்ளே போர்டு) வைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் வேக காட்சிப் பலகைகள் அருகே 100 ANPR கேமராக்களை இணைத்து அதன் மூலம் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு தானியங்கி முறையில் ஈ-சலான் அனுப்பப்படும் என சென்னை போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது. 

VMS பல்நோக்கு செய்தி பலகைகள்...

கடந்த 2014 ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை பரப்புவதற்காக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னை முழுவதும் 45 VMS பலகைகள் நிறுவப்பட்டன. அந்த பலவைகள் பழுதடைந்ததால் தற்போது ரூபாய் 3 கோடி மதிப்பில் 45 பல்நோக்கு செய்தி டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

LED போக்குவரத்து சுழற்சி செய்தி நிழற்குடை...

சென்னையில் உள்ள 309 சாலை சந்திப்புகளில், 139 சாலை சந்திப்புகளில் LED போக்குவரத்து செய்தி நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வுகள் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வரும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள்.

முதற்கட்டமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஐந்து முக்கிய சந்திப்புகளில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிக்னல்களை இயக்கும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செயல்பட்ட காரணத்தினால் தற்போது 170 சந்திப்புகளில் ரிமோட் கண்ட்ரோல் முறையில் சிக்னல்கள் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட திட்டங்கள் மூலம் சாலைகளில் விபத்துகளை குறைப்பதற்கும், வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் வழிவகை செய்யும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேற்கண்ட திட்டங்களை துவக்கி வைத்த பின்னர் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், ரிமோட் கண்ட்ரோல் சிக்னல் முறை இன்று துவக்கி இருப்பதாகவும், ANPR கேமரா மூலம் வாகனம்  வேகப்பதிவு காட்சிப்படுத்தப்படும் பலகை வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

வருங்காலங்ளில் சென்னை சாலைகளில் பல இடங்களில் இந்த பலகை வைக்க்கப்படும் எனவும் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு தானியங்கியாக இது அபராதம் விதிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.