திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து, தமிழக அரசின் செயல்பாடுகள், தவெக-வின் புதிய கூட்டணி மற்றும் தற்போதைய அரசியல் சுழல் குறித்த பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கும் விவகாரம் குறித்த கேள்விக்கு “எடுக்கப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது" என்றும் ஆனால் “சம்பவம் நடந்தபோதே சம்பந்தப்பட்டவர்களுக்கு முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்திருக்கலாம்” என்றும் தெரிவித்தார். அதையடுத்து “2029-ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலிலும் பிரதமராக நரேந்திர மோடியே மீண்டும் பதவியேற்பார். எந்தச் சூழ்நிலையிலும் பாஜக ஆளும் கட்சியாக வருவதை யாராலும் தடுக்க முடியாது” என்றும் குறிப்பிட்டார்.
விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய கருத்துகள் மற்றும் பேட்டிகள் குறித்த செய்தியாளரின் கேள்விகளுக்கு, “திருமாவளவன் கூறும் கருத்துகள், "பாலுக்கும் காவல் பூனைக்கும் காவல்" என்பதுபோல் உள்ளன. திருமாவளவன் ஒரு நெருடளோடு தவெக கூட்டணியில் பயணிக்கிறாரா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “அதனால தான அங்க ஒரு கால்.. இங்க ஒரு கால் வச்சிருக்காரு” என்று விமர்சித்தார். “அவர் ஏன்டா போனோம்னு நினைக்கிறாரா? அல்லது ஏன் இங்கு இருக்கிறோம் என்று நினைக்கிறாரா? என்பதை திருமாவளவன் கொஞ்சம் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, “அமைச்சர்கள் பள்ளிகளுக்கு ஆய்வு செல்லுவது தவறல்ல” என்று பதிலளித்தார். “ஆனால், குழந்தைகளை அடிமைகளைப் போல நடத்துவதும், அவர்களை கட்டாயப்படுத்தி 'ரீல்ஸ்' எடுப்பதும் ஏற்க முடியாதது". இந்த ஆட்சியைக் குறை கூறவில்லை. நாள்தோறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சிகள் அரசுக்கு அவகாசம் அளித்து செயல்பாடுகளை கண்காணிப்பது அவர்களது கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.
குதிரை பேரம் நடத்தி MLA க்கள் ராஜினாமா செய்யும் மோசமான அரசியல் இதுவரை தமிழகத்தில் நடந்தது கிடையாது என்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் MLA களை 'Horse Trading' செய்து வாங்குவதில் பிஸியாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். நீர்வளத்துறை அமைச்சர் நீர் வளங்களை கவனிக்காமல் குதிரை பேரம் செய்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் விமர்சித்திருந்தார். அண்ணாமலை குறித்த கேள்விக்கு, கட்சியில் இல்லாதவர்களை குறித்த கேள்வி வேண்டாம், எங்கள் கட்சியில் இருப்பவர்களை பற்றி கேளுங்கள் பதிலளிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்