தமிழ்நாடு

"ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்தே அது அப்படித்தான்....! அப்போது யுஜிசி விதி எங்கே போனது...? " -

Malaimurasu Seithigal TV

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை சார்பில் அரசர் முத்தையவேள் ஆய்வரங்க நிறைவு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கதிரேசன், பதிவாளர் டாக்டர் சிங்காரவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருமாரி டாக்டர் பொன்முடி பங்கேற்று பேசினார். பின்னர் விழா முடிந்து வெளியே வந்த அவரிடம், சித்தா மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர் கூறிய பதில் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி,

சித்தா பல்கலைக்கழக மசோதா பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிராக இருப்பதாக தமிழக ஆளுநர் கூறியிருக்கிறார். இசைக் கல்லூரியின் வேந்தர் யார் தெரியுமா? தமிழ்நாடு முதலமைச்சர்தான். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்தே அது அப்படித்தான் இருக்கிறது. அப்போது யுஜிசி விதி எங்கே போனது...? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

மற்றும், குஜராத் பல்கலைக்கழகத்திலும் அப்படித்தான் இருக்கிறது என்றும், தெலுங்கானா பல்கலைக்கழகத்தில் இப்போது மாற்றி இருப்பதாகவும்,  அதுபோல் எல்லா இடத்திலும் இருக்கிறது என்றும் தெரிவித்தார். அதோடு, ஆளுநரைப் பொறுத்தவரை அது தவறான கொள்கை எனவும், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுதான் முக்கியம் என்றும் கூறினார்.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரி துவங்குவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும்  கூறினார்.