மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த சில மாதங்களில் அவருக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்திலுள்ள கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, அங்கு கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சாட்சியங்களை கலைத்ததாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் மற்றும் வங்கி மேலாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சசிகலாவின் உறவினரான விவேக் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
5 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சசிகலாவிடம், கொடநாடு எஸ்டேட்டில் ஆவணங்கள் எதுவும் கொள்ளையடிக்கப்பட்டதா என்ற கோணத்தில் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது. அதன்படி தனிப்படை போலீசார் சென்னையில் வைத்து நாளை விசாரணையில் ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.