தமிழ்நாடு

தென்காசியில் கடத்தப்பட்ட கிருத்திகா படேல்...வழக்கில் நிகழ்ந்த அதிரடி திருப்பம்!

Tamil Selvi Selvakumar

தென்காசி மாவட்டம் இலஞ்சி கிராமத்தில் காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண்  கிருத்திகா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காப்பகத்தில் வைத்து விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா படேலும் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித்தும் கடந்த மாதம் 25 ஆம் தேதி காதல் திருமணம் செய்துக்கொண்டனர். இதையடுத்து, மாரியப்பன் வினித் வீட்டுக்கு வந்த கிருத்திகாவின் பெற்றோர் கிருத்திகாவை கடத்திச் சென்றனர். இதையடுத்து, தனது மனைவி கிருத்திகாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென்று  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, புகாரின் பேரில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு தனிப்படை போலீசார் குஜராத் சென்று கடத்தப்பட்ட பெண்ணை தேடி வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து வழக்கின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரனையை ஒத்தி வைத்த நிலையில், கிருத்திகா படேலை அழைத்து வந்த குற்றாலம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, கிருத்திகா படேல் விசாரணை அதிகாரி குறித்த உண்மையைக் கண்டறிய விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, கிருத்திகா படேலை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கிருத்திகாவின் பெற்றோர்கள் கிருத்திகாவைப் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரனையை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.