2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக மக்களுக்கும், கூட்டணி கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றிகளையும், வெற்றி பெட்ரா வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 148933 வாக்குகள் பெற்று, 98110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதையடுத்து 34 தொகுதிகளில் வென்ற தனது கட்சியினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதைத்தொடந்து தனது வலைதளப் பகுதியில் “நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டு தமிழக மக்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் பீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காக இயங்கும்” என்று சூளுரைத்த நம் புரட்சித்தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் உறுதியளித்தார்.
காலையில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முன்னணி வகித்து இரண்டாவது இடத்தில் இருந்த அதிமுக, அடுத்தடுத்த சுருக்களில் பின்னடைவை சந்தித்து தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.