தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 164.87 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழகத்தில் அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்று 27 மாவட்டங்களில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில், 164.87 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 49 கோடியே 54 லட்சம் விற்பனையாகியுள்ளது. ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபானங்களை வாங்கியதால், மதுப்பிரியர்கள் உற்சாகமடைந்தனர்.
ஊரடங்கு தளர்வின் ஒருபகுதியாக 27 மாவட்டங்களில் திங்கள்கிழமை மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி, சென்னை தி.நகரில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக போடப்பட்டிருந்த வட்டத்தில் வரிசையில் நின்ற மதுபிரியர்கள், மதுபானங்களை வாங்கினர். முகக்கவசம் அணிந்த வாடிக்கையாளர்களின் கைகளில், கிருமிநாசினி தெளித்த பின்பே மதுபானங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 49.54 கோடிக்கும், சென்னையில் 42.96 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் 33.65கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவை மண்டலத்தில் மதுக்கடைகள் திறக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.