தமிழ்நாடு

லூப் சாலை ஆக்கிரமிப்பு... ! மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு...!!

Malaimurasu Seithigal TV

பட்டினம் பாக்கம் சர்விஸ் சாலை நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை  மாநகராட்சி அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை மீன் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், ஐஸ் பெட்டிகள், மீன் வாங்குவோரின் வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தப்படுவதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்து ஆக்கிரமிப்புகளை  அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாநகராட்சி அதிகாரிகள்  சென்னை லைட் ஹவுஸ் முதல் பட்டினம் பாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை அப்புறப்படுத்தினர்.

இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டங்களை கைவிட்டனர். இந்த நிலையில் இன்று பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில்  சாலையோரம் மற்றும் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை  மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.  மேலும் அப்பகுதியில் உள்ள உணவு கடைகளும்  நடைபாதையில் வைக்க கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

எனவே இப்பகுதியில் பொதுமக்களால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் தடுப்பதற்காக அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அடிக்கடி இவ்வாறு கடைகளை அப்புறப்படுத்த கோரி மாநகராட்சி அதிகாரிகள் வருவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும். எங்களுடைய தொழிலை அரசாங்கம் வளர விட வேண்டும் எனவும் இல்லை என்றால் எங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு  உதவ அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கையை மீனவர்கள் முன் வைத்துள்ளனர்.