தமிழ்நாடு

பேஸ்புக்கில் காதல்: நாடு விட்டு நாடு வந்து காதலனைக் கைப்பிடித்த இலங்கை பெண்..!!

Malaimurasu Seithigal TV

பேஸ்புக்கில் அறிமுகமான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞரை, இலங்கை பெண் தேடிவந்து திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த விக்னேஸ்வரி என்ற பெண், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டா மண்டலம் அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் என்ற இளைஞருடன்  6 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக்கில் அறிமுகம் ஆனார்.

முதலில் நட்பாக பழகிய இவர்கள் நட்பு,  பின்னர் காதலாக மலர்ந்தது. மேஸ்திரி பணி செய்து வரும் லட்சுமணனை திருமணம் செய்ய விக்னேஸ்வரி முடிவு செய்தார். இதற்கு இலங்கையில் இருந்து இந்தியா வர சுற்றுலா விசா பெற்று இந்தியா வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் லட்சுமணன் - விக்னேஸ்வரியை வரவேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பத்தினருக்கு  விக்னேஸ்வரியை அறிமுகம் செய்து வைத்தார்.  லட்சுமணன் குடும்பத்தினரும் இவர்கள் காதலை ஏற்றதால்  ஊர் பெரியவர்கள் முன்னிலையில்  15 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

எல்லாமே மகிழ்ச்சியான முடிந்தது என்று அனைவரும் நினைக்கும் போது விக்னேஷ்வரியின் விசா ஆகஸ்ட் 6 -ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இது சிலர் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதில் இலங்கையை சேர்ந்த இளம்பெண்ணின் காதல் திருமணம் குறித்து விசாரித்த போலீசார் சித்தூர் எஸ்பி அலுவலகத்துக்கு போன் செய்து வரவழைத்தனர்.

பின்னர் விசா காலாவதியான விவரங்களை சேகரித்து,  சுற்றுலா விசா காலாவதியாகி இருப்பதால் காலக்கெடு முடிவதற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். மேலும் வெளிநாட்டு இளம் பெண்ணின் திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.