உடல்நலக்குறைவால் மதுரை ஆதீனம், ஞானசம்பந்த அருணகிரிநாதர் காலமானார். அவருக்கு வயது 77.
சுவாச பிரச்னையால் அவதிப்பட்ட மதுரை ஆதீனம், கடந்த 9 ஆம் தேதியன்று மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்றுமுன்தினம் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், நேற்று வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாச சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியானது. இதையடுத்து நேற்று 9.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி மதுரை ஆதீனம் காலமானார். தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இதன் தலைவராக 292 வது குருமகா சந்நிதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். சைவமும் தமிழும் இரு கண்கள் என வாழ்ந்து வந்தவர் ஆதீனம் அருணகிரிநாதர்.
தமிழ்தொண்டு, சமூக தொண்டு ஆன்மீக தொண்டு என ஈடுபட்டு வந்தவர். தான் நினைப்பதை சரி என்று நினைக்க கூடிய அரசியல் சமூக கருத்துக்களை முன்வைத்தவர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவுடன நட்பு பாராட்டி வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில், திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரானான சுந்தரமூர்த்தி தம்பிரானை இளைய ஆதீனமாக அறிவித்து, ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் சூட்டினார்.
மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.