தமிழ்நாடு

தமிழச்சியாக மாறிய மலேசிய பெண்.. காதல் செய்த கலாச்சார மாற்றம்...

தமிழ் கலாச்சாரத்தில் தனது காதலனை மலேசிய பெண் கரம் பிடித்ததை செண்டை மேளம் அடித்து உறவினர்கள் கொண்டாடினர்.

Malaimurasu Seithigal TV

இராமநாதபுரம் : காதல் வந்தால் சொல்லியனுப்பச் சொல்லி பல வகையான காதல் படங்களை நாம் பார்த்தது உண்டு. இவ்வளவு ஏன், சமீபத்தில் வந்த “ப்ரின்ஸ்” படத்தில் வருவது போல, வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள இன்றைய மாப்பிள்ளைகள் தவமாய்க் காத்திருக்க, தமிழ் மகன் ஒருவன், தனது காதலை கரம் பிடித்துள்ளார்.

மலேசியாவில் இருந்து வந்து, தனது காதலரை தமிழ் முறைபடியே திருமணம் செய்து, செண்டை மேளத்தோடு கொண்டாடி ஒரு அசத்து அசத்தியுள்ளார், நம் மலேசிய மருமகள் யீஷ் யான். இவகளது காதல் கதை தான் தற்போது ஒரு மெகா பட்ஜெட் படம் போல இணையத்தில் வைரலாகி வருகிறது.

மண்டபம் ஒன்றியம் சாத்தக் கோண்வலசை கிராமத்திற்கு உட்பட்ட பிள்ளை மடம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகேசன் - தில்லைவனம் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில், இளைய மகனான அருண் செல்வம் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு மாலத்தீவில் ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார்.

அதே ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்த யீஷ் யான் என்ற மலேசியா நாட்டு பெண் வேலை செய்து வந்தார். இருவரும் ஒரே இடத்தில் பணி புரிந்ததால் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இந்நிலையில் மலேசிய பெண்ணான யீஷ் யான் - க்கு  தமிழக கலாச்சாரம் மிகவும் பிடித்திருந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில், தனது திருமணம் தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று தனது காதலரான அருண் செல்வத்துடன் கூறவே இருவரும் தங்களது பெற்றோர்களிடம் தகவலைக் கூறி, தங்களது காதலுக்கு பச்சைக்கொடி வாங்கினர்.

தொடர்ந்து, நேற்று ராமநாதபுரத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் இருவரின் காதல், திருமணமாக நடந்தேறியது. திருமணத்தின் போது செண்டை மேளத்தை பார்த்து வியந்த காதலி யீஷ் யான் தனது காதலருக்கு மேளத்தை கொடுத்து, தான் சிங்கி என்ற பாரம்பரியத்தை இசைத்தபடி நடனமாடியது பார்ப்போரை மகிழ செய்தது.

பின்னர் தனது காதலியின் கழுத்தில் இந்து கலாச்சாரப்படி தாலி கட்டினார்.  ராமநாதபுரம் மாப்பிள்ளை அருண் செல்வம். திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் பெரியோர்கள் அட்சதை தூவி வாழ்த்தினர்.