கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 20 -ம் தேதி நடைபெற்ற மதிமுக உயர் நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டது. கட்சிப் பணியே செய்யாத ஒருவருக்கு கட்சி பதவி கொடுத்தது மதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், மதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் பலர் விலகினர். அத்துடன், மதிமுக தொடங்கியது முதல் உடன் இருக்கும் மல்லை சத்யா புறக்கணிக்கப்பட்டு வைகோவின் மகன் என்ற காரணத்திற்காக பதவி வழங்கபட்டதாக பல பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருந்தன.
அதன் நீட்சியாக வைகோ - துரை வைகோ பிரச்சினை உருவெடுத்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், மதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. அப்போது துரை வைகோ “கட்சியை விட்டே விலகுகிறேன்” என அறிக்கை வெளியிட்டார். இந்த பிரச்னையில்தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
ஆனால் இந்த பஞ்சாயத்துகள் ஓய்ந்ததாக நினைத்த வேளையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வைகோ, “மல்லை சத்யாவை உடன் பிறவாத தம்பியாகத் தான் நினைத்தேன். என்னைப் பற்றி மிக மோசமாக, பேசக்கூடிய நபர்களுடன் தொடர்பில் இருக்கிறார். பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார். கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் தாராளமாக வெளியேறி கொள்ளலாம், யார் வெளியேறினாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மல்லை சத்யாவின் பின்னணியில் திமுக இருப்பதாக கூறமுடியாது. அது உண்மையும் இல்லை” என்று பேசியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து வைகோவின் பேச்சு குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய மல்லை சத்யா, “வைகோ சொன்ன வர்த்தையால் தாங்கி கொள்ள முடியாத மனவேதனையில் இருக்கிறேன். துரோகம் செய்தேன் என்று கூறியதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுத்திருக்கலாம், குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்காக கொள்கையையே மாற்றிக்கொண்டு விட்டார். கட்சித் தலைமையை மகனுக்கு வழங்குவதற்குத் தயாராகி விட்டார்" என பேசியிருக்கிறார்.
பின்னணி
“மதிமுக -க்கு என்று அறக்கட்டளை சார்பில் ஒரு ரூ.5000 கோடி சொத்து இருக்கிறது. அந்த சொத்து தனக்கு பின்னால் தன் வாரிசுக்கு தான் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் வைகோ இவ்வாறு செய்கிறார். இது ஒரு வெளிப்படையான வாரிசு அரசியல். அவர் எதை எதிர்த்து கட்சி துவங்கினாரோ இன்று அதையே தான் அவரும் செய்கிறார். மேலும் திமுக தலைமையிடம் சென்று எந்த காரணத்தைக்கொண்டும் மல்லை சத்யாவை திமுக -வில் சேர்க்க கூடாது, என்றும் கேட்டுக்கொண்டு வந்துள்ளார்” என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மக்கள் மன்றத்தில் நீதிகேட்டு கடந்த ஆகஸ்ட் -2 உண்ணா நிலை அறப்போராட்டத்தை மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா சென்னை தீவுத்திடல் அருகே சிவானந்தா சாலையில் நடத்தினார்.
அன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா "தனது மகன் வருகைக்கு முன்பாக 28 ஆண்டுகாலம் ஜனநாயகவாதியாக இருந்தார் வைகோ... மகன் வருகைக்குப் பின்னால் மறுமலர்ச்சி விலகி மகன் திமுகவாக மாறி இருக்கிறது மதிமுக" என்றெல்லாம் விமர்சித்திருந்தார்.
இதனால் கோபமடைந்த வைகோ, கடந்த 17 -ஆம் தேதி மல்லை சத்யாவை மதிமுக துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மல்லை சத்யா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துவிட்டதாகவும் 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தன்னிடம் பதிலளிக்க வேண்டும் எனவும் வைகோ அறிவித்திருந்தார்.
நிரந்தர நீக்கம்
இந்நிலையில் இன்று மல்லை சத்யாவை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நிரந்தமாக நீக்குவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “திரு சி.ஏ.சத்யா ஆகிய தாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும், தங்களை நிரந்தரமாக ஏன் நீக்க கூடாது என 17-08-2025 அன்று விளக்கம் கேட்டு கழக சட்ட திட்டங்கள் படி நான் அறிவிப்பு வழங்கியிருந்தேன். அந்த அறிவிப்பை, 19-08-2025 அன்று பெற்றுக் கொண்டு தாங்கள் அளித்துள்ள, 24-08-2025 தேதியிட்ட பதில் அறிவிப்பு, மின்னஞ்சல் மூலமாகவும், 27-08-2025 அன்று பதிவு அஞ்சல் மூலமாகவும் கிடைக்கப் பெற்றேன். தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு 06-09-2025 அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.
பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுக்களை நீங்கள் மறுக்கவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமும் அளிக்கவில்லை. தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பு ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட முகாந்திரமாக இல்லை. தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கான பதில் முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 2 -இன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றம் புரிந்து, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 6-இன் படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5, விதி- 19, பிரிவு-12, விதி-35, பிரிவு-14, விதி-35, பிரிவு-15 இன் படி துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்”- என குறிப்பிடப்பட்டிருந்தது.
மல்லை சத்யா ரியாக்ஷன்
இந்நிலையில் கட்சியிலிருந்து இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறுகையில், “என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். தனது மகன் குறித்து மட்டுமே வைகோ யோசிக்கிறார்.. ஒரு தலைவராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தோற்றுவிட்டார். ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார். ஆதரவாளர்களை அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்தித்து ஜனநாயகபூர்வமாக பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன்” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.