தமிழ்நாடு

வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்... அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு...

திருக்கோவிலூர் தரைப்பாலத்தை நேரில் ஆய்வு செய்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

Malaimurasu Seithigal TV

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை இணைக்கும் தரைப்பாலம் தொடர் மழையின் காரணமாக மூழ்கியுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் இரண்டு கரைகளிலும் தடுப்பு அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு தடைசெய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரைப்பாலத்தை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில்; திருக்கோவிலூர் தரை பாலத்தை பெரும்பாலும் விவசாய பெருங்குடி மக்களே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்குவதால் விவசாய பெருங்குடி மக்கள் இந்த தரைப்பாலத்தின் வழியாக தங்களது விளை பொருட்களை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். மேலும், உடனடியாக இந்த தரைப்பாலத்தை மேம்பாலம் ஆக மாற்றும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.