தமிழ்நாடு

இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

Tamil Selvi Selvakumar

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக உள்ளார். 

சட்ட விரோத பண பரிமாற்றம் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற காவல் முடிவடைந்து இன்று எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அதன்படி, சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் அமர்வின் முன்பு, செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

முன்னதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு கடந்த 7 ஆம் தேதி நீதிமன்றம் அனுமதி அளித்தது, அதன்படி, 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தினர்.

பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் மீண்டும், அவரின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்து நேரில் ஆஜராக உள்ளார்.