தமிழ்நாடு

முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றுகிறார் மு.க.ஸ்டாலின்... தமிழகத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாட்டம்..

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா தமிழகத்தில் இன்று கோலாகலகமாகக் கொண்டாடப்படுகிறது. 

Malaimurasu Seithigal TV

75 வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் கவுரவிக்க உள்ளார்.

அத்துடன் தியாகிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதேபோன்று, விடுதிகளுக்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு பெட்டகம் தரவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக இந்த முறை சுதந்திர தின விழாவுக்கு வழக்கம்போல் அல்லாமல், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி சுதந்திர தின விழாவை காண மூத்த குடிமக்கள், பொதுமக்கள், பள்ளி -கல்லூரி மாணவர்கள் நேரில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், சமூக இடைவெளி, முகக கவசம் அணிதல் உள்ளிட்டவை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.