தமிழ்நாடு

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய MLA: வினோதமான தீர்பளித்த உயர்நீதிமன்றம்..!

Malaimurasu Seithigal TV

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ -விற்கு வித்தியாசமான ஒரு தீர்ப்பினை சென்னை உயர் நீதி மன்றம்  வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி  கள்ளக்குறிச்சியில் உள்ள  மந்தைவெளி பகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் அமைச்சர் உதயநிதி பற்றியும் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு  அவதூராக பேசியதாக அவர் மீது அன்று நள்ளிரவே 4 பிரிவுகளின் கீழ்  கள்ளக்குறிச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பிறகு வாய் தவறி ஒரு வார்த்தையை சொல்லி விட்டேன் என்றும் பிறர் மனம் புன்படும் வகையில் நான் பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அதிமுக  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தெரிவித்திருந்தார்...

இதனையடுத்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டதாகவும் அரசியல் உள் நோக்கத்தோடு தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கானது நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரனைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை  கேட்ட நீதிபதி பின்பு... காவல் துறையிடம் அனுமதி பெற்று ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து தான் பேசிய கருத்திற்கு  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். 

இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

அவதூறு வழக்கில் ஒரு எம்.பி தகுதிநீக்கம் செய்ய்ப்பட்டுவதாக வெளியான தீர்ப்புகளுக்கு மத்தியில் மன்னிப்பு கேட்பதற்காக தனியொரு பொதுக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.