தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நவீன கட்டடம் - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Suaif Arsath

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், 39 ஆயிரத்து 913 சதுர அடியில் 4 தளங்களுடன் புதியக் கட்டிடம் அமைய உள்ளது.

இங்கு கோயில் புத்தக விற்பனை நிலையம், வரவேற்பு அறை, உதவி ஆணையர்கள் அறை, மாவட்ட வருவாய் அலுவலர்கள் அறை, இந்து சமய அலுவலர்கள், பொறியாளர்களுக்கான அறைகள் அமைய உள்ளன. வாகன நிறுத்துமிடம், உணவகமும் அமைய உள்ளன.

இந்நிலையில், புதிய கூடுதல் கட்டிடத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, பூசாரிகள், பட்டாச்சாரியர்கள் உள்ளிட்ட கோயிலில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் 33 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு,  நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.