தமிழ்நாடு

மொஹரம் பண்டிகை; துக்கம் அனுசரிப்பு!

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் மொகரம் பண்டிகையையொட்டி, இமான் உசேன் நினைவாக கத்தியால் தங்களைத் தானே தாக்கிக் கொண்டு இஸ்லாமிய மக்கள் துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

முகமது நபியின் பேரன் இமாம் உசேன் மற்றும் அவருடன் இருந்தவர்களை எஷீர் என்பவர் கூண்டுக்குள் அடைத்து வைத்து, சித்ரவதை செய்து கொலை செய்ததாக வரலாறு கூறுகிறது. அந்த நாளை ஷியா பிரிவு முஸ்லீம்கள் துக்க நாளாக கடைபிடித்து வருகின்றனர்.

இதனால் மொகரத்தின் போது தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடம்பை கத்தி, பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தலை, மார்பு, முதுகுகளில் தாக்கிக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட ஊர்வலமாக சென்று தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்திலுள்ள ஷியா பிரிவு முஸ்லீம்கள், மொகரம் பண்டிகையின் முன் 8வது நாளில் ஒன்று இணைந்து தங்கள் உடம்பில்  கத்தி, பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களை கொண்டு  தாக்கிக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட கத்திப் போட்ட படி ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின்னர் அனைவரும் ஓரிடத்தில் திரண்டு அங்கு தங்களை தானே தாக்கிக் கொண்டு இமாம் உசேன் நினைவாக தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருத்திக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு தங்களது உடம்பை வருத்திக் கொண்டனர்.