விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த உந்து சக்தியாக இருந்தவர் நாராயணசாமி நாயுடு என அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமைபட கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் செங்காளிபாளையம் பகுதியில் பிறந்து, விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவரும், உழவர் பெருந்தலைவர் என போற்றப்படுபவரும் தான் நாராயணசாமி நாயுடு. அவரது பிறந்த நாளையொட்டி இன்று, கோவை, வையம்பாளையத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவாக நுழைவு வாயில் மற்றும் அவர் வாழ்ந்த இல்லத்தை நூலகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த உந்து சக்தியாக இருந்தவர் நாராயணசாமி நாயுடு என அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமைபட கூறியுள்ளார்.