தமிழ்நாடு

திருபுவனம் ராமலிங்கம் வழக்கு: தமிழ்நாடு முழுவதும் 24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!!

Malaimurasu Seithigal TV

நெல்லையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் வீடு உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்ற பிரச்சாரத்தை தடுத்ததாகக் கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு ராமலிங்கம் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பாமக நிர்வாகியாகிய இவர், இந்து முன்னணி பிரமுகராகவும் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டில், பிப்ரவரி 5ல் இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக, 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த படுகொலை குறித்து காவல் துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த போதிலும், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் திருநெல்வேலியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் முபாரக் வீட்டில் இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், தஞ்சை, மதுரை, விழுப்புரம் , கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், மொத்தம் 24 இடங்களில் சோதனை நடத்தி  வருகின்றனர்.