தமிழ்நாடு

பெற்ற குழந்தையை விற்ற தாய்... வந்தவாசியில் 9 பேர் கைது...

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், தகாத உறவில் பிறந்த குழந்தையை விற்றதாக தாய் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Malaimurasu Seithigal TV
தாழம்பள்ளத்தை சேர்ந்த சரத்குமார் என்பவரை காதலித்து வந்த அதே பகுதியை சேர்ந்த பவானி என்ற பெண் கடந்த ஜனவரி 16ம் தேதி, குழந்தை பெற்றுள்ளார். திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் ஊரார் கேலிக்கு ஆளாகுவதை தவிர்க்க குழந்தையை வேறு ஒருவருக்கு கொடுப்பதாக எடுத்து சென்ற சரத்குமார், அதன் பின் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பவானி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் விசாரித்ததில், சரத்குமார் அவரது குழந்தையை சென்னையை சேர்ந்த 4 பேரிடம்  3 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்றதும், அவர்கள் அந்த குழந்தையை ஈரோடை சேர்ந்த 3 பேரிடம் 5 லட்சம் ரூபாய்க்கு விற்றதும் தெரியவந்தது. அவர்களில் 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் 4 பேரை கைது செய்து விசாரித்ததில் குழந்தையின் தாய்க்கும் இதில் தொடர்பு இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.