தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் மாபெரும் விசை படகு போட்டி...

Tamil Selvi Selvakumar

திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி திமுக சார்பில் மாபெரும் விசை படகு போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே. சிற்றரசு கலந்து கொண்டு படகு போட்டியை துவக்கி வைத்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட நடுக்குப்பம், அயோத்தி குப்பம், மாட்டாங்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள், அதாவது ஒரு படகிற்கு குறைந்த பட்சமாக 4 பேர் வீதம் 28 படகுகளின் மூலம் 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த படகு போட்டியில் கலந்து கொண்டனர். அனைத்து படகுகளிலும் திமுகவினரின் கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது. 

அத்துடன் கடலுக்கு நடுவில்  மையமாக ஒரு படகு நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த படகை மையமாக கொண்டு , அதாவது 1.5 கிலோமீட்டர் தூரம் சென்று மீண்டும் 1.5 கிலோ மீட்டர் கரைக்கு திரும்பும் வகையில் என மொத்தம் 3 கிலோ மீட்டர் தூரம் இந்த படகு போட்டி நடைபெற்றது. போட்டி துவங்கும் போது மீனவர்கள் உற்சாகமாக தங்கள் படகை முன்னோக்கி செலுத்தினர்.

 இந்த போட்டியில் பங்கேற்கும் 28 படகுகளும் அதை சுற்றி விட்டு மீண்டும் கரைக்கு வர வேண்டும். அப்படி எந்த படகு முதலில் வருகிறதோ அவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படும். அவ்வாறு வெற்றி பெற்றவர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கு முதல் பரிசு 50,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 25000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 10,000 ரூபாயும் வழங்கப்பட்டு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளுக்காக  திருவல்லிக்கேணி பகுதி திமுக தொண்டர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். 

 அந்த வகையில் நடுக் குப்பத்தை சேர்ந்த குமார் என்பவரது படகு முதலாவதாக வந்து வெற்றியை பெற்றனர். மேலும் விசை படகுகள் சென்று திரும்பும் போது கடலில் அதிக கரும்புகையும் எழுந்தது .அதுமட்டுமின்றி இன்று விடுமுறை தினம் என்பதால் மெரினா கடற்கரையில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மெரினா கடற்கரைக்கு வந்த பொது மக்கள் பலரும் இந்த படகு போட்டி நடக்கும் இடத்திற்கு வந்து ஆர்வமாக போட்டியை கண்டு களித்தனர்.  பாதுகாப்பு கருதி இந்த போட்டி நடைபெறும் பகுதியில் சில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த போட்டியை காண கடற்கரை பகுதியில் ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். போட்டி துவங்கி படகுகள் கடலுக்கு செல்வதை உற்சாகமாக ரசித்து தங்கள் மொபைலில் புகைப்படமும் பொது மக்கள் எடுத்துக் கொண்டனர்.