தமிழ்நாடு

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் தொடரும் அதிரடி சோதனை....

அதிமுக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Malaimurasu Seithigal TV

சென்னை, நாமக்கல், ஈரோடு, வேலூர், சேலம், கரூர், திருப்பூர், கோவை மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்பட முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் அருகிலுள்ள கோவிந்தபாளையத்தில், தங்கமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் 20க்கும் மேற்பட்ட லஞ்ச போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் கூலகவுண்டனூர் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினரான வசந்தி சுப்ரமணி என்பவரது வீட்டிலும், கரூர் - கோவை சாலையில் உள்ள செராமிக் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 


 
சேலம், நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று கோவையில் உள்ள தங்கமணிக்கு சொந்தமான ஒரு இடத்தில் சோதனையில் ஈடுபட்ட போது, மூன்றாண்டுகளுக்கு முன்பே அந்த இடம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.