தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடையில் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க மாநகர காவல் துணை ஆணையர் சிபின் பரிசீலனை செய்துள்ளார். தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் திருச்சி மாவட்ட நிர்வாகி கரிகாலன் இருவரும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறேன் என எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தவுடன் காவல்துறை துணை ஆணையர் சிபின் அனுமதி கடிதம் வழங்குவார் என கூறப்படுகிறது.
திருச்சி மரக்கடையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10:30 மணியில் இருந்து 11 மணி வரை மட்டுமே அவர் அந்த இடத்தில் பேச முடியும்.
காலை 9:30 மணி அளவில் மரக்கடை பகுதிக்கு தொண்டர்களை வரவழைத்திருக்க வேண்டும். ரோடு ஷோ நடத்தக்கூடாது. விஜய் வரும்போது அவருடைய வாகனத்துக்கு முன்பும் பின்பும் 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி . வேறு வாகனங்கள் வந்தால் அனுமதி மறுக்கப்படும். மருத்துவ வசதி ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் தமிழக வெற்றிக்கழகத்தினர் செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடாது.
பொதுமக்கள் யாருக்கும் போக்குவரத்தில் இடையூறு செய்யக்கூடாது. கூம்பு வடிவ ஸ்பீக்கர்களை வைக்கக்கூடாது. தாவெக தொண்டர்கள் மிக நீளமான குச்சி கொடி எடுத்து வரக்கூடாது. பள்ளிக்கு செல்பவர்கள், விமான நிலையம் செல்பவர்கள், மருத்துவமனை செல்பவர்களுக்கு, வழி விட வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பவை உள்ளிட்ட 23 நிபந்தனைகளை திருச்சி மாநகர காவல் துறையினர் விதித்துள்ளனர. இதை ஏற்று அந்த உறுதி மொழியை எடுத்து எழுத்துப்பூர்வமாக கடிதம் மூலம் கொடுத்தவுடன் அனுமதி கடிதத்தை மாநகர காவல் துணை ஆணையர் சிபின் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.