தமிழ்நாடு

இழப்பீடு கேட்டு வழக்கு; என்.எல்.சி.யை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவு !

Malaimurasu Seithigal TV

என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட  நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதுமான இழப்பீடும் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் என் எல் சி கையகப்படுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்க கோரி என என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தலால் பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்டோர் நலச் சங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், நில உரிமையாளர்களின் மறுவாழ்வுக்கு தமிழக அரசு எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளின்படி, இழப்பீடு, மறுவாழ்வு, மறு குடியமர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முடிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர் மட்டுமே எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், என்.எல்.சி. தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த  நீதிபதிகள், என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.