தமிழ்நாடு

பங்குனி திருவிழா கோலாகலம்...பக்தர்கள் புனித நீராடி கரகம் ஏந்தி ஊர்வலம்...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு விநோத வழிபாடுகள் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் தாளியாம்பட்டி மகா மாரியம்மன் கோவிலின் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி கரகம் ஏந்தி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் தீ குண்டத்தில் கரகத்துடன் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

இதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பாப்பா ஊரணி சௌடாம்பிகை அம்மன் கோயிலின் 76 ஆம் ஆண்டு பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து  50 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் மேல் ஆடை இன்றி  உடல் மீது இரு கைகளால் கத்தி வீசி, குருதி சிந்த அம்மனை கோவிலுக்கு அழைத்துச் செல்லும் வினோத வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து மயிலாடுதுறையில் முத்தாட்சி அம்மன் கோயிலில் தீச்சட்டி திருவிழா நடைபெற்றது. ஆலய நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட மூவரில் இருவர் தீச்சட்டிகளை கையில் ஏந்தியும், பைரவருக்கான திரீசுலம் ஏந்தி நடனமாடியவாறும் சென்றனர். அதனை தொடர்ந்து தீச்சட்டி ஏந்தியவர்களை அம்மனாக வழிபட்டு வீட்டுவாசலில் குத்துவிளக்கு ஏற்றி பழவகைகளை வைத்து வழிபட்டனர்.