சென்னையை அடுத்த கோவளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக ஒரு கட்சியே இல்லை, பிளாக்மைல் பண்ற கட்சி என்று விமர்சித்துள்ளார்.
சென்னையை அடுத்த கோவளம் கடற்கரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் படகு போட்டி நடபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இறுதி போட்டியை துவக்கி வைத்தார்.
இதன்பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி, அதிமுகவினர் தேர்தல் சமயங்களில் மட்டும் தான் மக்களை சந்திக்க வருவார்கள் எனவும், எடப்பாடி பழனிச்சாமி யாருக்காகவது உண்மையாக இருந்து இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியவர், ஆளுநருக்கு அடிமையாக இருக்கக் கூடியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் பாஜக-வின் அலுவலக வாசலில் போட்டி போட்டு காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாஜக ஒரு கட்சியே இல்லை. அது ஒரு ஆடியோ வீடியோ கட்சி. பிளாக்மைல் (Block mail) பண்ற கட்சி என்று சாடியுள்ளார். பாஜகவும், அதிமுகவும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று கூறியவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை தேடி தரவேண்டும் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து, படகுபோட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.