மதுரையிலுள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்காக காலை முதல் நீண்ட வரிசையில் ஆதார் மையத்தின் முன்பாக ஆயிரக்கணக்கான காத்துக்கிடக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.
தென் மாவட்டத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மாநகர் கே.கே நகர் பகுதியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி தேனி ,திண்டுக்கல் ராமநாதபுரம் , சிவகங்கை ,விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுவட்டார மக்களின் ஆதார் பிரச்சனை தொடர்பாக ஆதார் பெயர் திருத்தம் மற்றும் அப்டேட் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது பள்ளிகளுக்கான தேர்வு தொடங்க உள்ள நிலையில் ஹால்டிக்கெட்டுக்களுக்கான ஆவண பணிகள் தொடங்கியுள்ளதால் மாணவ மாணவிகளுக்கான ஆதாரில் திருத்தம் மற்றும் பெயர் முகவரியில் திருத்தம் உள்ளிட்டவற்றை செய்வதற்கு தென்மாவட்டங்களில் போதிய அளவிற்கான ஆதார் மையம் இல்லாத நிலையில், மக்கள் அனைவரும் மதுரைக்கே வர வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது. மதுரையில் மட்டுமே மத்திய அரசின் கீழுள்ள ஆதார் மையம் உள்ளதால் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் இந்த ஒரு சேவை மையத்தையே நம்பியுள்ளனர். இதன் காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது ஆதார் சேவைகளை பெறுவதற்காக மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஆதார் மையத்தில் குவிந்து வருகின்றனர். நேற்று (ஞாயிறு) விடுமுறை நாளிலும் ஆதார் மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை 5 மணி முதலாகவே ஆதார் சேவை மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இது குறித்து பேசிய பொதுமக்கள் தங்கள் ஊர்களில் ஆதார் சேவை மையம் இல்லாத நிலையில் மதுரைக்கு சென்றால் மட்டும் தான் சரி செய்ய முடியும்என்ற சூழல் உருவாகியுள்ளதாக வருத்தம் தெரிவித்து வருகின்றனர், “அதிகாலை 5 மணிக்கு எல்லாம் எழுந்து ஆதார் மையத்திற்கு வந்திருக்கிறோம் 9.30 மணிக்கு ஆதார் மையம் திறப்பார்கள் ஆனால் வேறு வழியில்லாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் திருத்த சேவைகளை ஈடுபட வேண்டியது உள்ளது” என ஆதார் திருத்தத்திற்காக வந்திருந்த ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரையில் வைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையம் போல தென் மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறிய அளவிற்கான மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும் மதுரை, கே.கே நகர் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் எதிரில் இருக்கக்கூடிய ஆதார் மையத்தில் நாளொன்றுக்கு நூறு பேர் அமரும் அளவிற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தரக்கூடிய நிலையில் அதே பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு அங்குள்ள கடைகளில் முன்பாக வரிசையில் காத்திருப்பதால் கடைக்கு வரக்கூடியவர்களுக்கும் ஆதார் சேவை மையத்திற்காக காத்திருக்க கூடியவர்களுக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
மாவட்டங்களில் இருக்கக்கூடிய தமிழக அரசின் ஆதார் சேவை மையத்திலும், போதிய கணினிகள் மற்றும் இடம் இல்லாததால் அந்த மையங்களும் முறையாக செயல்படாத சூழலே உள்ளது.
எனவே தமிழக அரசும் தனது இ சேவை மூலமாக வழங்கப்படும் ஆதார் சேவைகளை துரிதமாக வழங்குவதற்கான புதிய கணினிகளையும் புதிய அலுவலகங்களின் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் மாவட்ட அளவிலான ஆதார் சேவை மையங்களில் சிறிய சிறிய திருத்தங்களை கூட செய்யாமல், எதற்கெடுத்தாலும் மதுரைக்கு செல்லுமாறு பொதுமக்களிடம் கூறுவதால் ஒரு நாள் முழுக்க ஆதார் திருத்தத்திற்காக வீணாவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.