தமிழ்நாடு

பிரதமர் மோடியின் சென்னை பயணம்... திட்டங்கள் என்ன?!

Malaimurasu Seithigal TV

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 8ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி.  சென்னை வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் அவர், பிற்பகல் 2.30 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையத்தில் வந்து இறங்கவுள்ளார்.  அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.  வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன முனையத்தைப் பார்வையிடுகிறார்.

அதன் பின்பு, சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு செல்கிறார்.  அங்கிருந்து கார் மூலம் சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு செல்லும் அவர்,சென்னை-கோவை இடையே ஓட உள்ள அதிவேக ரெயிலான 'வந்தே பாரத்' ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

அதையடுத்து அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டு மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்கிறார்.  தொடர்ந்து கார் மூலம் புறப்பட்டு பல்லாவரத்தில் உள்ள ராணுவ மைதானத்துக்கு செல்லும் அவர், சென்னையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு பல்வேறு திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

இறுதியாக அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்கிறார்.