தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் +2 மாணவியின் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கிற்கு வரும் மே 25ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக போக்ஸோ நீதிமன்றம் கூறியுள்ளது. நேற்றுடன் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கடந்த மார்ச் 11ம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ். இவரது மனைவி காளீஸ்வரி இந்த தம்பதிக்கு 17 வயது மகள் இருந்த நிலையில் அவர் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமி இயற்கை உபாதைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், வெகு நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். எனவே பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதட்டத்துடன் மாணவியை தேடி அழைத்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து, மறுநாள் காலை காட்டுப்பகுதியில் மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில் கிகண்டெடுக்கப்பட்டுள்ளார்.
உடலை கைப்பற்றி விசாரித்த போலீசார் 15க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதன்பின்பு முக்கிய குற்றவாளியை கைது செய்தனர். பிடிபட்ட 30 வயது வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் உடலில் நகக்கீறல்கள் இருந்ததை தொடர்ந்து உயிரிழந்த மாணவியின் நகங்களுக்குள் இருந்த சதைத் துணுக்குகளின் டி.என்.ஏ (DNA) சோதனை மாதிரி அந்த இளைஞரின் டி.என்.ஏ- வுடன் ஒத்துப்போனதால் அவர் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கில் வரும் மே மாதம் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று போக்ஸோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.