தமிழ்நாடு

ரூல்ஸ் போடற நீங்க அத ஃபாலோ பன்றீங்களா?

பொதுமக்களை தட்டிக் கேட்கும் காவல்துறை அதிகாரிகளை மட்டும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

சாலையில் வாகன ஓட்டிகளைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தான் போக்குவரத்து விதிகள். பாதுகாப்பாக பயணம் செய்ய கொண்டுவரப்பட்ட இந்த சட்டங்களால், மக்களுக்கு நன்மை ஏற்பட்டதோ இல்லையோ, அவர்களுக்கு தலைவலி தான் அதிகரித்துள்ளது என்று சொல்லலாம்.

கடந்த 5 முதல் 10 ஆண்டுகள் வரை பல லட்சம் பொதுமக்கள் விதிமீறல்கள் காரணமாக பல லட்சம் ரூபாய்க்கு அபராதம் கட்டியுள்ளனர். சாலையோரமாக நின்று வாகன ஓட்டிகளை மடக்கி பிடிக்கும் போக்குவரத்து காவல் துறையினரால், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

அப்படி துறத்தி பிடிக்கும் காவலர்கள் தாங்கள் முதலில் அந்த விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனரா? என்ற கேள்விக்கு இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை. இந்த சந்தேகம் பெரிதளவில் மக்கள் மனதில் உருவாகியுள்ளதால் ப்ரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்நிலையில் சமூக ஆர்வலர் காசி மாயன் என்பவர் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி காவலர்களிடம் முறையாக அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார். இதில் கடந்த 2019-ம் ஆண்டு தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர்களின் எண்ணிக்கை 65 பேர் எனவும், இதில் 41 பேரிடம் அபராதமாக வெறும் 4100 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 24 காவலர்களிடம் அபராதத்தொகை வசூலிக்கப்படவே இல்லை என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

பொதுமக்களை விரட்டி விரட்டி அபராதம் வசூலிக்கும் காவல்துறையினர், தன் துறை சார்ந்த காவலர்களை மட்டும் விட்டு வைப்பது சரியா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறும் காவலர்களை குறிப்பிட்ட அதிகாரிகள் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

அது மட்டுமின்றி, யாரோ 10 ரூபாய் ஸ்டாம்பை ஒட்டி தகவலைக் கேட்பார்கள்.. இவர்களுக்கெல்லாம் ஏதோ ஒரு பதிலை கொடுக்க வேண்டுமா என அலட்சியத்துடன் பதில் அளிக்கின்றனர் அதிகாரிகள். இந்த விதிமீறல் தொடர்பாக பிரபல யூ-டியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் காவல்துறைக்கு எதிராக கேள்விக்கணைகளையும் விடுத்திருக்கிறார். 

பொதுமக்களுக்கு விதிமீறலுக்காக அபராதம் விதிக்கும் போலீசார், தன் துறை சார்ந்த காவலர்களையும், நெருக்கமான வழக்கறிஞர்களையும் கண்டு கொள்ளாமல் விடுவது ஏன்? என வார்த்தையால் தாக்குகிறார் இந்த வாகன ஓட்டி. 

சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது.. உயர்வென்ன தாழ்வென்ன எது வந்தபோதும், சட்டம் ஒன்றுதாறே தவறானவர்களோடு மோதும் என கூறுவதுண்டு.. ஆக, தவறை தட்டிக் கேட்க வேண்டிய காவலர்களே தவறு செய்யும் போது, பொதுமக்களை மட்டும் புழுவை போல நசுக்குவது ஏன்? காக்கிச் சட்டையே கரைபடிந்தால் நீதி எப்படி சமநிலையில் இருக்கும் என்பதே சாமானியனின் கேள்வியாக உள்ளது.