polling booth  
தமிழ்நாடு

சற்று நேரத்தில் தொடங்கவுள்ள வாக்குப்பதிவு… பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 1.47 லட்சம் காவல்துறையினர்

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது..

Mahalakshmi Somasundaram

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இன்னும் சற்று நேரத்தில் வாக்கு பதிவு தொடர உள்ள நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் மாநிலம் முழுவதிலும் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3,022 இடங்களில் உள்ள 5,398 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கூறப்படுகிறது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 1.47 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் 295 கம்பெனிகள் சேர்ந்த சுமார் 23,000 துணை ராணுவ படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 31 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவ படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு வாக்கு சாவடிகளில் அந்த தொகுதிக்கான வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் ஆகியவற்றை வாக்காளர்கள் எளிய வகையில் அடையாளம் காண காட்சிப்படுதப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெண்கள் பாதுகாப்புடனும், எளிதாகவும் வாக்களிக்கும் வகையில் “பிங்க்” வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாக வாக்களிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கம்போல இந்த முறையும் முதல் முறை வாக்காளர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கவும் அவர்களுக்கு உதவும் வகையிலும் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாதிரி வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் வாக்களிக்க தயாராக வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்