தமிழ்நாடு

இபிஎஸ்க்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

Malaimurasu Seithigal TV

கண்டனக் குரல்கள்

தமிழகத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த எதிரொலியின் காரணமாக முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியே பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு கட்சி பணிகளை தொடர்ந்து வரும் நிலையில். எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக தொண்டர்கள் சார்பில் தமிழகத்தில் அவ்வப்போது கண்டனக் குரல்கள் எழுந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்,திப்பணம்பட்டி, அரியப்பபுரம், ஆவுடையானூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பதவி வெறி பிடித்த எடப்பாடியே வெளியேறு

கண்டன போஸ்டரில் 'கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் கட்டி காத்த அஇஅதிமு கழகத்தை தொடர் தோல்வியால் அழிவு பாதைக்கு கொண்டு சென்றுள்ள பதவி வெறி பிடித்த எடப்பாடியே வெளியேறு அதிமுக கட்சியை விட்டு வெளியேறு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வகுத்துக் கொடுத்த கட்சியின் சட்ட விதியை மாற்றாதே என்றும் இவன் அஇஅதிமுக உண்மை தொண்டர்கள் கீழப்பாவூர் தெற்கு ஒன்றியம் தென்காசி தெற்கு ' என அச்சிடப்பட்டுள்ளது. பாவூர்சத்திரம் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கீழப்பாவூர் ஒன்றிய அதிமுக சார்பில் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அச்சக உரிமையாளரிடம் விசாரணை

புகாரின் பேரில் போஸ்டர்களை அச்சிட்டு கொடுத்த அச்சக உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேற்கொண்டு போஸ்டர்களை ஒட்டிய நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பாவூர்சத்திரம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது