ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தியது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
காலாவதியான சட்டம்:
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் விளக்கம் கேட்டு காலம் தாழ்த்தி வந்ததால் தற்போது அவசர சட்டம் காலாவதியானது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆலோசனை வழங்கிய டிடிவி:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அமமுக புரட்சி தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி தினகரன் பங்கேற்று பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
ஆளுநருக்கு அழகல்ல:
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தியது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல என்று தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசர சட்டம் காலாவதியானது துரதிருஷ்டவசமானது. வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமலும், விமர்சனத்துக்கு உள்ளாகாமலும் ஆளுநர் செயல்பட வேண்டும் என கூறினார்.