தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயில் : பொது போக்குவரத்து அனுமதி மனு தள்ளுபடி!

Tamil Selvi Selvakumar

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பொது போக்குவரத்தினை அனுமதிக்க கோரிய வழக்கினை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

மதுரை சித்திரை வீதி மற்றும் சுற்று வீதிகளில் குடியிருப்போர் மற்றும் வியாபாரிகள் சங்க செயலாளர் மகேஷ் என்பவர், பொது போக்குவரத்தை அனுமதிக்கக் கோரி  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 4 சித்திரை வீதிகளில் வாகன பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு, கோயில் வாகனங்கள், அரசு அதிகாரிகளின் வாகனங்கள்,  காவல்துறை வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால், குடியிருப்போர் மற்றும் பக்தர்களின் வாகனங்களை மட்டும் அனுமதிப்பதில்லை. எனவே, 
கோயிலை சுற்றி குடியிருப்போர் மற்றும் பக்தர்களின் வாகனங்களையும் அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வு, கோயிலின் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பொது நலன் கருதி, கொள்கை ரீதியான முடிவில் தலையிட வேண்டியதில்லை என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.