சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்த குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த வீடுகளில் கட்டுமான பணி தரமற்று இருப்பதாகவும், கையால் தட்டினாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்வதாகவும், இதனால் தாங்கள் உயிர் பயத்தில் வசித்து வருவதாகவும் அங்கு குடியிருப்பவர்கள் குற்றம் சாட்டினார். இதுகுறித்த வீடியோ காட்சியும் சமூகவலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.
மேலும் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரம் குறித்து ஐ.ஐ.டி. அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கழகம்) தலைமை செயல் பொறியாளர் பத்மநாபன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் உள்ள புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரம் குறித்து ஆய்வு செய்து குடியிருக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
ஐஐடி நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த மாதம் 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து,புளியந்தோப்பு கே.பி.பூங்காவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானம் தரமில்லாமல் உள்ளதா? குடியிருப்பின் பாகங்கள் இடிந்துவிழ காரணம் என்ன? குடியிருப்பை கட்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை? அடுத்தகட்ட பணிகள் என்ன? என்பது தொடர்பாக முழு அறிக்கையை நகர்புற மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் கோவிந்தராவ் இடம் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், பல்வேறு பல்வேறு குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், ஐஐடி நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், 45 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மீண்டும் பூச்சு வேலைகள் மற்றும் கழிப்பறைகளிலும் பணிகளை செய்து முடிக்க வேண்டும் எனவும், பணிகள் முடிந்த பின் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.