தமிழ்நாடு

உதிரும் வகையில் கட்டடம் கட்டிய பி.எஸ்.டி., கட்டுமான நிறுவனம்... வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு தரமற்ற முறையில் கட்டிடங்கள் கட்டி கொடுத்த ஒப்பந்ததாரர் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

நாமக்கல் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பி.எஸ்.தென்னரசு. பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் இவர், அரசு கட்டிடங்கள், குடிசை மாற்று வாரியக் கட்டிடங்கள், பாலங்கள் என  கட்டிடப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களும் தரமற்ற முறையில் இருப்பதாகவும், இதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் கட்டிடங்கள் அனைத்தும் உதிர்ந்து விழும் வகையில் இருந்தது.

கடந்த அதிமுக ஆட்சியில் தான் இந்நிறுவனத்திற்கு அதிகளவில் கட்டுமான ஒப்பந்தங்கள் கிடைத்ததாக கூறப்படும் நிலையில், ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பரமத்தி வேலூர், நல்லூர் மற்றும் நல்லிபாளையத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இரண்டு குழுக்களாக பிரிந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.