தமிழ்நாடு

பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை என்றால் ஒன்றும் ஆகி விடாது - ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி!

பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை என்றால் ஒன்றும் ஆகி விடாது எனக்கூறி, இடைக்கால ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனுவை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamil Selvi Selvakumar

ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக கைதான அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் ஜாமீனில் தளர்வு வழங்கக் கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஹிமா கோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சியின் மாவட்ட செயலாளர் என்பதால் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனக்கூறி ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இவர் கலந்து கொள்ளவில்லை என்றால் ஒன்றும் ஆகி விடாது எனக்கூறி இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என தெரிவித்து ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.