விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் களத்தூரில் வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று எதிர்பாராதவிதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஆலையின் 6 அறைகள் இடிந்து தரைமட்டமாகிய நிலையில், இதுவரை 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் தம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் வெடி விபத்தில் 5 பேர் இறந்த துயரச் செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமடைந்ததாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.