சாலை விதி மீறல்கள், கடத்தல் விவகாரங்களில் சிக்கிய வானகங்கள் மற்றும் விபத்துகளில் சிக்கிய வாகனங்கள் என பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் காவல் நிலைய வளாகங்களில் நீண்ட காலமாக தேங்கிக் கிடப்பதாகவும், இதனால் காவல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதோடு, சுகாதாரமற்ற சூழ்நிலை உருவாகுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு தேங்கிக் கிடக்கும் வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும், ஏலத்தில் விடும் நடவடிக்கையில் ஈடுபடவும் அறிவுறுத்தி அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் விபத்தில் சிக்கி சேதமான வாகனங்களை துரதிஷ்டம் எனக்கருதி அதை திருப்பி வாங்க உரிமையாளர்கள் முன் வருவதில்லை எனவும், அவ்வாறு இருப்பவர்களை வீடுகளுக்கே தேடிச் சென்று வாகனங்களை ஒப்படைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கென தனிக்குழு ஒன்றை அமைத்து பல்வேறு மாவட்டங்களில் இந்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.