தமிழ்நாடு

ரௌடிக்கு எலும்பு முறிவு எல்லாம் இல்லை,.கீழே விழுந்துவிட்டார் அவ்வளவு தான்.! நீதிமன்றத்தில் போலீசார் பதில்.! 

Malaimurasu Seithigal TV

சென்னையை சேர்ந்த ரௌடி காக்கா தோப்பு பாலாஜிக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது.

இதனையடுத்து பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வட சென்னையின் பிரபல ரௌடி காக்கா தோப்பு பாலாஜி. இவன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவன் காவல்துறையினர் பிடியில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்து வந்தான்.

தலைமறைவாக இருந்தவனை கடந்த ஜூன் 12 ஆம் தேதி விழுப்புரம் அருகே காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் கைது செய்தபோது காக்கா தோப்பு பாலாஜி காவல்துறையினரை தாக்கி தப்பிக்க நினைத்து குதித்த போது அவனின் கை மற்றும் காலில் உள்ள எலும்புகள் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. 

இதனால் பாலாஜியை கைது செய்த காவல்துறையினர் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியும், எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி அவனது தாய் கண்மணி  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் காக்கா தோப்பு பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவனுக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை எனவும், உடலில் ஏற்பட்ட இருந்த காயங்களுக்கவும், கொரோனா தொற்று சிகிச்சைக்காக 10 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்ததாகவும், பின்னர் ஜூன் 23 ஆம் தேதி மருத்துவ சிகிச்சை முடிந்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும்.தற்போது பாலாஜி உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி நிர்மல்குமார், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பாலாஜிக்கு எலும்பு முறிவு இல்லை எனவும் அறுவை சிகிச்சை தேவையில்லை எனவும், காயங்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டுள்ளதால் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டார்.