தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் இனி ”QR Code”தான்...அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

Tamil Selvi Selvakumar

நியாயவிலை கடைகளில் QR Code மூலம் உணவுப் பொருட்களை பெறும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, செந்தில் பாலாஜி மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் உணவு வழங்கல் துறை சார்பாக தரமான பொருட்களை வழங்கி வருவதாக கூறினார். அத்துடன் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யவும், தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுதோறும் சிறுதானிய உணவு திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அனைத்து நியாயவிலை கடைகளிலும் பணம் இல்லாமல் ”QR Code” மூலம் ஸ்கேன் செய்து உணவுப் பொருட்களை பெறும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.