தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு.. கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கம்!!

பள்ளிகள் நாளை திறக்கப்படவுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Suaif Arsath

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும்  முதற்கட்டமாக ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பலரும் குடும்பத்துடன் சொந்த ஊர், உறவினர்கள் வீடு என சென்றுள்ளனர்.

இதனிடையே  கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, வகுப்புகள் தொடங்குவதில் காலத்தாமதம் ஏற்படலாம் என கருதப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என உறுதி தெரிவித்துள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  வகுப்பு தொடங்கிய முதல் 5 நாட்கள் குழந்தைகளுக்கு நல்லநொழுக்க வகுப்பு நடைபெறும் என கூறியுள்ளார்.

இந்தநிலையில் குழந்தைகளுடன் சொந்த ஊர் சென்றவர்கள், வீடு திரும்புவதற்கு வசதியாக தமிழக போக்குவரத்து துறை சார்பில் இன்று கூடுதலாக ஆயிரத்து 450 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஏற்கனவே விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகள் உடன் கூடுதலாக 400 பேருந்துகள் கடந்த வாரம் இயக்கப்பட்டன. இந்தநிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவின் பேரில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.