தமிழ்நாடு

என்.எல்.சி விவகாரம் "திமுகவின் அரசப்பயங்கரவாதம்" சீமான் கண்டனம்!

Malaimurasu Seithigal TV

என் எல் சி விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாடு ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் என் எல் சி நிறுவன விரிவாக்கப் பணிகளை எதிர்த்து நேற்று பாமகவினர் போராடியதையடுத்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, பாமகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக 300க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இச்சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களை அத்துமீறிக் கையகப்படுத்தும் அரச நிர்வாகத்தின் கொடுஞ்செயலைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய அறப்போராட்டத்தில் திமுக அரசால் ஏவப்பட்ட அரச வன்முறையானது கடும் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளை நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளை நிலங்கள் பாதுகாக்கப்படுமென சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்த திமுக, தற்போது பயிர் விளைந்து அறுவடைக்கு‌ நிற்கும் விவசாய நிலங்களில் கனரக எந்திரங்களை இறக்கி, நிலங்களை அடாவடித்தனமாகப் பறிப்பதென்பது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த வேளாண் பெருங்குடி மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம் என விமர்சித்துள்ளார். தொடர்ந்து, சமூக நீதி அரசு, விடியல் ஆட்சியென வாய்கிழியப் பேசிவிட்டு, ஒன்றிய அரசின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மண்ணின் மக்களின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, ஒடுக்கி அடக்கும் திமுக அரசின் செயல்பாடு ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதம் என விமர்சித்துள்ள சீமான், அதற்கு எனது எதிர்ப்புணர்வைப் பதிவுசெய்வதோடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கப்பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தத் துடிக்கும் மக்கள் விரோதச்செயலை கடும் மக்கள் போராட்டங்கள் மூலமாக முறியடிப்போமென உறுதியளித்துள்ளார்.